08/04/2015
மேகமலை
கொளுத்தும் கோடை வெப்பத்திற்கு இதமாக குளுமையான மலைப்பிரதேசங்களை மனம் நாடுவது இயற்கை. ஊட்டி, கொடைக்கானல் என்று எல்லோரையும் போல போகாமல் கூட்டம் அதிகம் சேராத மலைப் பிரதேசங்களுக்கு குடும்பத்தோடு சென்று வரலாம். மனம் அமைதியடைவதோடு இயற்கையின் அழகையும் இனிமையாக ரசிக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மேகமலை மலைவாசஸ்தலம் இயற்கை ஆர்வலர்களுக்கு, ஒரு சிறப்பு வாய்ந்த இடமாகும்.
நான்கு மலைச்சிகரங்கள் நடுவே அமைந்துள்ள பள்ளத்தாக்குதான் மேகமலை. இது கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. உயர்ந்த மலைகள், அடர்ந்த மரங்கள், பசுமையான நிலபரப்பு, அழகிய ஏரிப்பகுதி என இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டம் காண்பவர் கண்ணுக்கு விருந்தளிக்கும். மேகங்களின் தாய்வீடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் இது மேகங்களின் தாய்வீடு. மலை முழுவதும் மேகக் கூட்டம் கணப்படுவதாலேயே இது மேகமலை என்று பெயர் பெற்றுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரிலி்ருந்து மலைப்பாதையில் மூன்று மணி நேரப் பயணம் செய்தால் மேகமலையை அடையலாம். மலைப்பாதையில் வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் வீடுகள் என பயணமே ஒரு சுக அனுபவமாகும். பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில் கூட “ஸ்வெட்டர்" தேவைப்படும். வர்த்தக மயமாகாததால் மலைப் பகுதி சீர்கெடாமல் உள்ளது. மலையாறு அணை இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை சுத்தம். திடீரென யானைக் கூட்டங்களின் படையெடுப்பும் இருக்கும். அவை தண்ணீர் அருந்துவதை தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்)… என விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
சபரிமலை சீஸன் காலத்தில் அந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இடம் பெயர்ந்து பெரியார் அணைக்கட்டு, மேகமலைப் பகுதிகளுக்கு வந்துவிடும். ஆனால் மனிதர்கள் யாருக்கும் இன்றுவரை எந்த ஒரு விலங்கினாலும் தொந்தரவு ஏற்பட்டதில்லை என்பதுதான் வியப்பிற்குரிய விசயம். மேகமலையை சுற்றியுள்ள 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு வனவிலங்கு சரணலயமாக வனத்துறை அறிவித்துள்ளது. ஆன்மீக பிரியர்கள் மேகமலை அடிவாரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தை தரிசிக்கலாம். தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுருளி தீர்த்தம் எனப்படும் சுருளி அருவிக்கும் சென்று நீராடலாம். எப்படிப் போகலாம் ? சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு பேருந்து வசதி உள்ளது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே இந்த வசதி உண்டு. கட்டணம் 20 ரூபாய். தனியாக வாகனம் மூலம் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம். குடும்பத்துடன் செல்பவர்கள் மாலைக்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது. இருப்பினும் தங்குவதற்கு சில ஆயிரம் வாடகையில் ரிசார்ட்டுகளும் கிடைக்கும்.
மேகமலையை சுற்றிப்பார்க்க வருபவர்களுக்குசரியான வசதிகள் இல்லை. கிடைக்கும் சொற்ப வசதிகளுக்கும் மிகவும் பணம் பிடுங்கிவிடுகிறார்கள். கீழிருந்து தான் எல்லாம் வர வேண்டியுள்ளது. ஆனால் நல்ல காற்று ஆரோக்கியமான சுற்றுபுறம் மற்றும் நல்ல தண்ணீருக்காக இவையெல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளலாம்.
இங்கே வசிக்கும் முருகன் என்பவர் இங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு முடிந்த வசதிகள் செய்துதருகிறார். ஆனால் முழுவதும் வணிககண்ணோட்டத்திலேயே செயல்படுகிறார். மேகமலைக்கு செல்ல நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளவும். இவரின் கைபேசி எண்.9442781748.
பசுமைப் போர்த்திய மலைகளும், வெண் பஞ்சு மேகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஒன்றையொன்று தழுவிக் கொள்கிற அட்டகாசமான இடம் மேகமலை. திரும்பிய பக்கமெல்லாம் பார்வையைப் பறித்துப் போகிற பச்சைத் தேயிலைத் தோட்டங்கள். அதற்கிடையே அடைந்து கிடக்கும் நீர்த்தேக்கங்கள், இவையெல்லாம் மனிதனின் காலடிப் பட்டு சிதைந்து போகாத இயற்கைக்குச் சொந்தமான காட்சிகள்.
சன்னாசி மொட்டை
இத்தனைக் காலம் தனியார் கைவசம் சிக்கியிருந்த இந்த அழகுப் பொக்கிஷ¬த்தை எல்லோரும் ரசிக்கும் வண்ணம் 2009-ல் தமிழக அரசு திறந்துவிட்டது. அப்போது அறிவித்த புதிய சுற்றுலாத் தலங்களில் மேகமலையும் ஒன்று.
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 29 கி.மீ. பயணித்தால் வருகிறது மேகமலை கிராமம். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி அடுத்த 20 கி.மீ. தேயிலைத் தோட்டம். இந்த மலைப் பாதையில் பயணிக்க தனி ‘தில்’ வேண்டும். குண்டும் குழியுமாய் இருக்கும் இந்தப் பாதையில் ‘காஸ்ட்லி’யான காரில் பயணம் செய்தாலும் கட்டை வண்டியில் போகும் அனுபவத்தையே கொடுக்கும். பாதையின் பெரும்பகுதி வனப் பகுதிக்குள் வளைய வருவதால், விலங்குகளின் நடமாட்டம் ஆங்காங்கே இருக்கும்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாதையில் புள்ளிமான் குறுக்கிட்டு மிரண்டு ஓடும். யானை மறியல் செய்து ‘சலாம்’ போடும். சிங்கவால் குரங்கு மரத்தில் தொங்கி சிரிக்கும். விலங்குகள் கட்டுப்பாடு இல்லாமல் அலைந்து திரிகிற வனப்பரப்பு இது. சிங்கத்தைத் தவிர எல்லா விலங்குகளுமே இங்கு ஜீவனம் செய்கின்றன.
கொண்டை குருவி
600 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த வனப்பிரதேசம் மேகமலை வனச் சரணாலயமாக மாற்றம் பெற்றுள்ளது. இதில் கிட்டத்தட்ட 200 சதுர கி.மீ அளவுக்கு தேயிலை, காபி, ஏலக்காய்த் தோட்டங்கள் பரவிக் கிடக்கின்றன.
மேகமலை வெறும் மலை வாசஸ்தலம் மட்டுமல்ல. இங்கு டிரக்கிங், அனிமல் சைட்டிங் போன்ற மற்ற அம்சங்களும் ஏராளம். விலங்குகளைப் பார்ப்பதற்கு வட்டப்பாறை, போதப்புல்மேடு, சன்னாசி மொட்டை என்கிற 'எலிபேண்ட் காரிடர்' ஆகியவைகள் சிறந்த இடம். போதப் புல்மேட்டில் வரையாடுகள் அதிகம். ஐயப்பன் கோயில் சீஸனில் குன்னிக்காடுகளில் உள்ள யானைகள் மேகமலைப் பகுதிக்கு வந்துவிடுவதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் இங்கு நிறைய யானைகளைப் பார்க்கலாம்.
தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள்
மலையேற நினைப்பவர்களுக்கு வசதியாக நிறைய டிரக்கிங் பாயிண்ட்டுகள் உள்ளன. ராஜபாளையம்-வெள்ளிமலை, ஸ்ரீவில்லி புத்தூர்-வெள்ளிமலை, மேகமலை-வெள்ளிமலை போன்ற 8 மணி நேர மலையேற்றப் பாதைகளும், ஹைவேவீஸ்-வண்ணாத்திப்பாறை, இரவங்கலாறு-கிராஸ் ஹில் போன்ற 3 மணிநேர டிரெக்கிங்கும் உள்ளன. சாகஸப் பிரியர்களுக்கு இவையெல்லாம் சாதகமாய் உள்ளன.
மேகமலையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் ஹைவேவீஸ் உள்ளது. தமிழில் இதை ‘பச்சைக் கூமாச்சி’ என்கிறார்கள். இதற்கு பசுமையான மலை என்று அர்த்தம். இங்கு இரண்டு அணைகள் உள்ளன. இதுபோக மேலும் மூன்று அணைகளும் சேர்த்து சிறிது சிறிதாக மொத்தம் ஐந்து அணைகள் மேகமலையில் உள்ளன. அணைகளின் உள்ளே செல்ல அனுமதியில்லை என்றாலும், தொலைவில் இருந்து பார்ப்பதே தனி அழகுதான். இங்குதான் மேகங்கள் நம்மை தழுவிச் செல்கின்றன. தூவாணம் கவர்ச்சிமிக்க அழகுப் பிரதேசங்களில் ஒன்று.இதனைக் கடந்து சற்று தொலைவில் இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. அது மிக அற்புதமானது. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த நீரை அருந்தினால் வயிற்று வலி, தலை வலி, தலைச்சுற்றல் எல்லாம் பறந்தோடிவிடும் என்று இங்குள்ள மக்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.
தூவாணம் நீர்த்தேக்கம்
இரைச்சல் பாறையில் இருந்து வழியும் நீர்தான் அருவியாக கொட்டுகிறது. இதுதான் சுருளியாறாகச் சென்று வைகை நதியில் கலக்கிறது. மற்றொரு பகுதியில் விழும் அருவி நீர் தேக்கடி நீர்த்தேக்கத்துக்குப் போகிறது. மேகமலையின் அழகுப் பிரதேசங்களில் இந்த அருவியும் ஒன்று. இதுபோக ஹைவேவீஸ் டேம், பச்சைக் கூமாச்சி, தூவாணம் நீர்த்தேக்கம், மணலாறு பாலம், மணலாறு எஸ்டேட், மஹாராஜா மெட்டு, வட்டப்பாறை, போதப்புல் மேடு, கிராஸ் ஹில், சன்னாசி மொட்டை என்ற எல்லா இடங்களுமே அழகின் பொக்கிஷங்கள். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இனிய விருந்து.
மணலாறு பாலம்
விலங்குகளைப் பார்க்க விரும்புபவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களை வழிகாட்டி அழைத்துப்போக ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். பிறந்ததில் இருந்து இங்கேயே இருக்கும் பிச்சைக்கு மலையின் ஒவ்வொரு அங்குலமும் அத்துப்படி. விலங்குகள் எதிர்பட்டால் எப்படி தப்பிக்க வேண்டும்? என்ற நுட்பத்தையும், அவற்றை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் அவைகளும் நம்மை ஒன்றும் செய்யாது என்றும், விலங்குகளின் மனநிலையை கூறினார். சுற்றுலாப் பயணிகளை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று விளக்கமுடன் சொல்கிறார்.
மகாராஜா மெட்டு
மேகமலைக்கு தற்போது ஒரேயயாரு பாதைதான் உள்ளது. இதில் பஸ்ஸோ லாரியோ பிரேக் டவுண் ஆகி பாதியில் நின்றுவிட்டால் பாதை அடைபட்டுப் போகும். இதை நிவர்த்தி செய்ய மேகமலையில் இருந்து லோயர் கேம்ப் வரை செல்லும் பாதையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிறார் ஹைவேவீஸ் சேர்மன் சுரேஷ். இந்தப் பாதையை சரிசெய்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்க முடியும் என்கிறார்.
செயற்கைத்தனங்கள் நுழையாத இயற்கையை ரசிக்க விரும்புவர்களுக்கு மேகமலை மிக அற்புதமான பொக்கிஷம்!
http://www.megamalai.com/
Megamalai Tourism, for Reservation call 98940-55554
Contact Us:
Megamalai Tourism
No1, HMS Colony,
Andalpuram, TPK Road,
Madurai - 625003
H/p: 94 878 50508
[email protected]
Megamalai Tourism
15/16 Raja andhuvan Estate,
Megamalai,
H/p: 94 878 50508
[email protected]