01/09/2022
மரணத்திலிருந்து தப்புவதற்கு உதவிய நண்பர் (உண்மைச் சம்பவத்தைத் தழுவியது)
“நான் இந்த வலியை உணர்ந்து கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாகின்றது. ஆரம்பத்தில் சூட்டுக்
கொப்பளம் போன்ற ஒன்று கீழ் உதட்டின் இடது பக்கத்தில் தோன்றியது. அது குணமடைய நீண்ட
காலமானதால் ஒரு மருந்தகத்தில் மருந்து எடுத்தேன். அதன் பிறகு வீட்டில் கைவைத்தியம் செய்யப்பட்டது.
எந்த ஒரு முறையாலேயும் அதைக் குணப்படுத்த முடியவில்லை. அதே சமயம் அலுவலகத்திலுள்ள நண்பர்
ஒருவர் பற்சிகிச்சையகத்தில் இதைக் காட்டுவோம் என்று சொன்னார். நாங்கள் கிராமத்து
வைத்தியசாலையின் பற்சிகிச்சையகத்துக்குப் போனோம். அங்கிருந்து பெரிய வைத்தியசாலையிலுள்ள
விஷேட பற்சிகிச்சையகத்துக்கு அனுப்பப்பட்டேன். அங்கே காயத்தின் ஒருபகுதி பரிசோதனைக்காக
எடுக்கப்பட்டது. சோதனை அறிக்கையைப் பெற்றுக்கொள்ள மீண்டும் வருமாறு ஒருநாள் எனக்கு
செய்தியொன்று வந்தது. அறிக்கையின்படி இது வாய்ப்புற்று நோயாகும். உடலின் ஏனைய பகுதிகளுக்கும்
இது பரவக்கூடும் என்பதால் விரைவில் சத்திர சிகிச்சையொன்று செய்யப்படவேண்டும் என்று அந்த
நேரத்தில் தெரிந்துகொண்டேன்”.
அடுத்த நாளுக்கான சத்திரசிகிச்சைப் பட்டியலில் முதலாவதாகப் பதிவு செய்யப்பட்டிருந்த 44வயதான
சுரேஷ் என்பவரைப் பொது வைத்தியசாலை விடுதியொன்றில் சந்தித்துப் பேசியபோது, அவர் தனது
கதையை இவ்வாறு சொல்லத் தொடங்கினார்.
“நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வசூல் செய்யும் அதிகாரியாக வேலை செய்கிறேன். மதுபானம் மற்றும்
சிகரெட் பாவனை என்பவற்றால் இப்படியாக வரக்கூடும் என்று எனக்குத் தெரியும். அதனால் நான் சிகரெட்
புகைப்பதில்லை எப்போதாவது ஒருநாள் மதுபானம் குடிப்பேன்.இருப்பினும் 20 வருடங்களாக ‘பாபுல்’பீடா
சாப்பிடுகிறேன். அவற்றை வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டு ஒவ்வொருநாளும் கொஞ்சம் கொஞ்சமாகச்
சாப்பிட்டேன். இப்படியே சிலகாலம் போனபின்பு காரமான சாப்பாடு ஏதாவது சாப்பிடும்போது வாய்
எரியத் தொடங்கியது.சுருக்கமாகச் சொன்னால் காரமற்று வெள்ளைக் கறியாகச் சமைத்தவற்றை மட்டுமே
சாப்பிடமுடிந்தது.எனது மனைவி வற்புறுத்தியும் நான் இந்த ‘பாபுல்’பழக்கத்தை நிறுத்தவில்லை. சிறிது
காலத்தின் பின்பு எனது மனைவியின் வேண்டுகோளின்படி நிறுத்தினாலும் அதன் பாதிப்பு தொடர்கிறது
போல இருக்கிறது. பாபுல் பீடாவிலுள்ள வெற்றிலையும் புகையிலையும் இந்தளவு அழிவை ஏற்படுத்தும்
என்று நான் நினைக்கவேயில்லை”.
இதைச்சொல்லிவிட்டு சுரேஷ் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான்.நோயாளிகளைப் பார்வையிடும்
நேரம் ஆரம்பித்ததும் அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் ஒவ்வொருவராக விடுதியினுள் வரத்தொடங்க,
சுரேஷ் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“எனக்குப் பாடசாலைக்குச் செல்லும் வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள்
பயப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கு இன்னும் உண்மையைச் சொல்லவில்லை. உண்மையான
விபரங்களை எனது மனைவியிடம் கூறும்படி வைத்தியசாலையில் என்னிடம் சொன்னார்கள் அதற்கு
முன்பே தனக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவரிடம் வைத்திய அறிக்கைகளைக் காட்டி அது புற்றுநோய் என்று
அறிந்து வைத்திருந்தாள். எனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்கி உடனடியாக நான் இங்கே
வந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்குமென்று சொல்லவே முடியாது. குடும்பத்தில் வேலை செய்து
உழைப்பவன் நான் ஒருவன் மட்டும் தான்”. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி அவன் சொன்னான்.
அதிர்ஷ்டவசமாக எனது புற்றுநோயின்நிலை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் சத்திர சிகிச்சையின் பின்பு
வரக்கூடிய பிரச்சனைகள் குறைவாகலாம் என்று எனது வைத்தியர் கூறினார்.
நாளை நடைபெற இருக்கும் சத்திரசிகிச்சை 100% வெற்றியடையவும் அவரது வாய்ப்புற்றுநோய் முற்றாகக்
குணமடையவும் பிரார்த்தித்துக் கொண்டு மரணவாசலில் இருந்து தப்பித்த அவரது கதையை உங்களுக்குச்
சொல்லுவதற்கு அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு விடைபெற்றோம்.
……………………………………………………………………………………
வாய்புற்று நோய்க்கான பிரதான காரணிகள் பாக்கு மற்றும் புகையிலை அடங்கிய வெற்றிலைக்கூறு
சாப்பிடுதல், புகைத்தல் மற்றும் மது அருந்துதல் என்பனவாம். பாரம்பரியமாகப் பாவிக்கப்படும்
வெற்றிலைக்கூறு தவிர வேறு விதங்களில் பதப்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படும் பாக்கு, புகையிலை
என்பனவும் புற்றுநோய் ஆக்கிகளாகச் செயற்படுகின்றன.
இலங்கையில் ஆண்களில் காணப்படும் புற்றுநோய் வகைகளில் பொதுவானது வாய் புற்றுநோய் ஆகும்.
தினமும் இலங்கையில் வாய்ப்புற்றுநோயினால் மூன்று பேர் மரணிக்கின்றனர். தினமும் ஆறு பேர்
வரையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களில் 70% வைத்தியசாலைக்கு
வரும்போது அதிகபட்ச பாதிப்புக்கு அதாவது புற்றுநோயின் மூன்றாவது அல்லது நான்காவது நிலைக்கு
உட்பட்டிருப்பார்கள். இறுதி நிலைகளில் சிகிச்சை அளித்தாலும் முகத்தில் விகாரங்கள் ஏற்படுவதால்
சாப்பிடுவதிலும் கதைப்பதிலும் சிரமங்கள் ஏற்படும் அத்துடன் சிரமங்களை வாழ்நாள் முழுவதும்
அனுபவிக்க நேரிடும்.. தொழில் செய்யும் இடங்களிலும் சில கஷ்டங்கள் நேரிடலாம்.
இதனால் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையையும் பரிதாபகரமானதாக மாற்றும்
மேற்கண்ட ஆபத்தான பழக்கங்களிலிருந்து உடனடியாக விடுபடுவதின் மூலம் வாய்புற்றுநோயின்
ஆபத்தைக் குறைக்கலாம். அதுமட்டுமன்றி இப்படியான ஆபத்தான பழக்கவழக்கங்களில் ஈடுபட்டுள்ள
உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து அவர்களையும் காப்பாற்றுவீர்கள் என
எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஏதாவது வாய்ச்சுகாதாரப் பிரச்சனைகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல்
உடனடியாக ஒரு பல்வைத்தியரை அணுகுவது மிகமிக அவசியம். உங்கள் அனைவருக்கும் நோயற்றவாழ்வு
கிடைப்பதாக!